செம்மலரா? காவிமலரா?
கேள்வி : "திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. எனவே திருமணங்கள் தேவையில்லை" (ஆனந்த விகடன் 9-9-09) என்கிற கமல்ஹாசனின் கருத்து சரிதானா?
பதில் : தன்னை வைத்து உலகை அளக்கக்கூடாது. ஒரு தனிமனிதருக்கு திருமணம் தோல்வியாக முடிந்திருக்கக்கூடும். ஆனால், சகலருக்கும் இல்லையே? மேற்கத்திய நாடுகளுக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் உள்ள ஒரு முக்கியமான வேறுபாடு இங்கே சேமிப்புப் பழக்கம் இருப்பது. இதற்கு குடும்பத்தவர் மீதுள்ள பற்று முக்கியமான காரணம். நாட்டுப் பொருளாதாரத்திற்கே உதவியாக இருக்கும் திருமண முறை. குழந்தைகளுக்கு மிகப்பெரும் சமூகப் பாதுகாப்பு மையமாக இருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இன்னொரு விஷயம். திருமணமுறை தேவையில்லை என்பவர்கள் அதற்கான மாற்றைச் சொல்வதில்லை. உண்மை என்னவென்றால் திருமணத்திற்கு மாற்று அதையும் விட உன்னதமான உறவு முறையாகவே இருக்க முடியும். அதை நோக்கிய பயணத்தில் இப்போது வேண்டப்படுவது ஜனநாயகக் குடும்பம். குழந்தைகளுக்காகப் பெற்றோர்கள் செய்யும் தியாகமாகக் குடும்பம் இருந்தால் நல்லது. இப்போதோ தாய் மட்டுமே தியாகம் செய்பவராக இருக்கிறார்; தந்தை யஜமானன் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இத்தகைய திருமணங்கள் தோல்வியில் முடிவதில் ஆச்சரியம் இல்லை. இது ஒருபுறமிருக்க, தனது கலைவாழ்வின் பொன்விழாவைக் கொண்டாடும் கமலை மனப்பூர்வமாகப் பாராட்டுவோம். விதவிதமான கெட்-அப்புகளில் கவனம் செலுத்துவதைவிட "மகாநதி" போன்ற வாழ்வின் யதார்த்தங்களை வெளிப்படுத்திய படங்களில் கவனம் செலுத்தி புதுப்புது வெற்றிகளை ஈட்டட்டும் என்று வாழ்த்துவோம்.
திருமணம் குறித்த கமலின் கருத்து சரிதானா என்பதை விவாதத்திற்கு எடுப்பதற்கு முன்னர், அதுகுறித்து “கம்யூனிச” செம்மலர் வெளியிட்டுள்ள கருத்து சரிதானா என்பதை நாம் விவாதிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
//தன்னை வைத்து உலகை அளக்கக்கூடாது. ஒரு தனிமனிதருக்கு திருமணம் தோல்வியாக முடிந்திருக்கக்கூடும். ஆனால், சகலருக்கும் இல்லையே? //
கமலும் அவரது மனைவி(கள்)யும் பிரிந்துவிட்டார்கள். ஆகவே அவர்களது திருமணம் “தோல்வி”யில் முடிந்துவிட்டது என்கிறது “செம்மலர்”. அய்யா தோழரே , இங்கு நிறைய திருமணங்கள் “வெற்றி” நடை போட்டுக்கொண்டிருப்பதற்கு காரணம், மனைவிமார்கள் பலர் தங்களுடைய அனைத்து தேவைகளுக்கும் கணவன்மார்களையே நம்பி இருப்பதுவும், குழந்தை குட்டி என்றானபிறகு அதுகளை வளர்த்தெடுக்கவேண்டி சேர்ந்து வாழ்ந்து தொலைக்க வேண்டியிருப்பதுவுமே ஒழிய வேறில்லை.
//மேற்கத்திய நாடுகளுக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் உள்ள ஒரு முக்கியமான வேறுபாடு இங்கே சேமிப்புப் பழக்கம் இருப்பது. இதற்கு குடும்பத்தவர் மீதுள்ள பற்று முக்கியமான காரணம்.//
குடும்பத்தவர் மீதுள்ள பற்று காரணமாக சொத்து சேர்த்தல் என்பதுதானே “தனியுடைமை”யின் தோற்றம்.
//நாட்டுப் பொருளாதாரத்திற்கே உதவியாக இருக்கும் திருமண முறை.//
அம்பானி, மாறன், போன்ற முதலாளிகளெல்லாம் தங்கள் குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் சொத்து “சேமிக்கும் பழக்கம்” நாட்டின் பொருளாதாரத்திற்கே உதவியாக இருக்கிறதா?.
//குழந்தைகளுக்கு மிகப்பெரும் சமூகப் பாதுகாப்பு மையமாக இருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை//
இந்திய குடும்ப அமைப்பு முறை என்பது குழந்தைகளுக்கு கொடும்சிறையாக உள்ளது என்பதுதானே முற்போக்காளர்களின் வாதம். அது எப்படி பாதுகாப்பு மையமாக திகழ்கிறது?
செம்மலரில் வந்த இந்த பதிலைப் படித்தவுடன், உண்மையிலேயே எனக்கொரு சந்தேகம். இது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையா, இல்லை ஆர்.எஸ்.எஸ்’இன் பத்திரிகையா?
சி.பி.எம் கட்சிகாரர்களைப் பற்றி சீமான் ஒரு கூட்டத்தில் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. “இவங்கெல்லாம், மார்க்ஸை படிச்சாங்கலா, இல்ல மண்டைக்கு வச்சு படுத்தாங்கலான்னு தெரியல”
அய்யா சி.பி.எம் காம்ரேடுகளே, நீங்கள் பெரியாரின் “பெண் ஏன் அடிமையானால்?” படிக்க மாட்டீர்கள். அவர் உங்களுக்கு வரட்டு நாத்திகவாதி. தயவுசெய்து ஏங்கல்ஸின் “குடும்பம், தனிச்சொத்து, அரசு” என்ற புத்தகத்தையாவது படியுங்கள். அல்லது தயவுசெய்து “கம்யூனிசத்தை” விட்டுவிடுங்கள். பாவம் பிழைத்துப்போகட்டும்.
Labels: கமல், கம்யூனிசம், சி.பி.எம், செம்மலர்