மெய்ப்பொருள் காண்பது அறிவு ..

Monday, November 02, 2009

செம்மலரா? காவிமலரா?

செம்மலர் அக்டோபர்'09 இதழில் வெளிவந்த கேள்வி-பதில் பகுதியிலிருந்து ...

கேள்வி : "திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. எனவே திருமணங்கள் தேவையில்லை" (ஆனந்த விகடன் 9-9-09) என்கிற கமல்ஹாசனின் கருத்து சரிதானா?

பதில் : தன்னை வைத்து உலகை அளக்கக்கூடாது. ஒரு தனிமனிதருக்கு திருமணம் தோல்வியாக முடிந்திருக்கக்கூடும். ஆனால், சகலருக்கும் இல்லையே? மேற்கத்திய நாடுகளுக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் உள்ள ஒரு முக்கியமான வேறுபாடு இங்கே சேமிப்புப் பழக்கம் இருப்பது. இதற்கு குடும்பத்தவர் மீதுள்ள பற்று முக்கியமான காரணம். நாட்டுப் பொருளாதாரத்திற்கே உதவியாக இருக்கும் திருமண முறை. குழந்தைகளுக்கு மிகப்பெரும் சமூகப் பாதுகாப்பு மையமாக இருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இன்னொரு விஷயம். திருமணமுறை தேவையில்லை என்பவர்கள் அதற்கான மாற்றைச் சொல்வதில்லை. உண்மை என்னவென்றால் திருமணத்திற்கு மாற்று அதையும் விட உன்னதமான உறவு முறையாகவே இருக்க முடியும். அதை நோக்கிய பயணத்தில் இப்போது வேண்டப்படுவது ஜனநாயகக் குடும்பம். குழந்தைகளுக்காகப் பெற்றோர்கள் செய்யும் தியாகமாகக் குடும்பம் இருந்தால் நல்லது. இப்போதோ தாய் மட்டுமே தியாகம் செய்பவராக இருக்கிறார்; தந்தை யஜமானன் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இத்தகைய திருமணங்கள் தோல்வியில் முடிவதில் ஆச்சரியம் இல்லை. இது ஒருபுறமிருக்க, தனது கலைவாழ்வின் பொன்விழாவைக் கொண்டாடும் கமலை மனப்பூர்வமாகப் பாராட்டுவோம். விதவிதமான கெட்-அப்புகளில் கவனம் செலுத்துவதைவிட "மகாநதி" போன்ற வாழ்வின் யதார்த்தங்களை வெளிப்படுத்திய படங்களில் கவனம் செலுத்தி புதுப்புது வெற்றிகளை ஈட்டட்டும் என்று வாழ்த்துவோம்.


திருமணம் குறித்த கமலின் கருத்து சரிதானா என்பதை விவாதத்திற்கு எடுப்பதற்கு முன்னர், அதுகுறித்து “கம்யூனிச” செம்மலர் வெளியிட்டுள்ள கருத்து சரிதானா என்பதை நாம் விவாதிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

//தன்னை வைத்து உலகை அளக்கக்கூடாது. ஒரு தனிமனிதருக்கு திருமணம் தோல்வியாக முடிந்திருக்கக்கூடும். ஆனால், சகலருக்கும் இல்லையே? //

கமலும் அவரது மனைவி(கள்)யும் பிரிந்துவிட்டார்கள். ஆகவே அவர்களது திருமணம் “தோல்வி”யில் முடிந்துவிட்டது என்கிறது “செம்மலர்”. அய்யா தோழரே , இங்கு நிறைய திருமணங்கள் “வெற்றி” நடை போட்டுக்கொண்டிருப்பதற்கு காரணம், மனைவிமார்கள் பலர் தங்களுடைய அனைத்து தேவைகளுக்கும் கணவன்மார்களையே நம்பி இருப்பதுவும், குழந்தை குட்டி என்றானபிறகு அதுகளை வளர்த்தெடுக்கவேண்டி சேர்ந்து வாழ்ந்து தொலைக்க வேண்டியிருப்பதுவுமே ஒழிய வேறில்லை.

//மேற்கத்திய நாடுகளுக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் உள்ள ஒரு முக்கியமான வேறுபாடு இங்கே சேமிப்புப் பழக்கம் இருப்பது. இதற்கு குடும்பத்தவர் மீதுள்ள பற்று முக்கியமான காரணம்.//

குடும்பத்தவர் மீதுள்ள பற்று காரணமாக சொத்து சேர்த்தல் என்பதுதானே “தனியுடைமை”யின் தோற்றம்.

//நாட்டுப் பொருளாதாரத்திற்கே உதவியாக இருக்கும் திருமண முறை.//
அம்பானி, மாறன், போன்ற முதலாளிகளெல்லாம் தங்கள் குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் சொத்து “சேமிக்கும் பழக்கம்” நாட்டின் பொருளாதாரத்திற்கே உதவியாக இருக்கிறதா?.

//குழந்தைகளுக்கு மிகப்பெரும் சமூகப் பாதுகாப்பு மையமாக இருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை//

இந்திய குடும்ப அமைப்பு முறை என்பது குழந்தைகளுக்கு கொடும்சிறையாக உள்ளது என்பதுதானே முற்போக்காளர்களின் வாதம். அது எப்படி பாதுகாப்பு மையமாக திகழ்கிறது?


செம்மலரில் வந்த இந்த பதிலைப் படித்தவுடன், உண்மையிலேயே எனக்கொரு சந்தேகம். இது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையா, இல்லை ஆர்.எஸ்.எஸ்’இன் பத்திரிகையா?

சி.பி.எம் கட்சிகாரர்களைப் பற்றி சீமான் ஒரு கூட்டத்தில் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. “இவங்கெல்லாம், மார்க்ஸை படிச்சாங்கலா, இல்ல மண்டைக்கு வச்சு படுத்தாங்கலான்னு தெரியல”

அய்யா சி.பி.எம் காம்ரேடுகளே, நீங்கள் பெரியாரின் “பெண் ஏன் அடிமையானால்?” படிக்க மாட்டீர்கள். அவர் உங்களுக்கு வரட்டு நாத்திகவாதி. தயவுசெய்து ஏங்கல்ஸின் “குடும்பம், தனிச்சொத்து, அரசு” என்ற புத்தகத்தையாவது படியுங்கள். அல்லது தயவுசெய்து “கம்யூனிசத்தை” விட்டுவிடுங்கள். பாவம் பிழைத்துப்போகட்டும்.

Labels: , , ,

ஈழம் Vs தேர்தல்: எதிரியை சற்று விட்டுவைக்கலாம்

ஜெயலலிதா திருந்திவிட்டாரென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. “கண்டிப்பாக ஈழம் பெற்றுத்தருவேன்” என்று உரத்த குரலில் சபதமிடும் ஜெயலலிதா, தேர்தல் முடிந்த அடுத்த நிமிடம் இதை மாற்றிப்பேசமாட்டார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஜெயலலிதா நாடகமாடுகிறார் என்பதை யாரும் விளக்கம் கொடுத்து புரிய வைக்கவேண்டியதில்லை. ஆக இந்த அளவில் நாம் ஜெயலலிதாவை நம்பலாம். ஆனால் கண்டிப்பாக கருணாநிதியை எந்த விதத்திலும் எள்ளளவும் நம்பக்கூடாது என்று அவரே நிருபித்து வருகிறார்.

சகோதர யுத்தம் கூடாது என்று கண்ணீர் விடுகிற இந்த கருணாநிதி, எண்பதுகளில் எம்.ஜி.ஆர் மீது கொண்ட பகைமையினால் ஈழப்போராளிக் குழுக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டதை நாம் பெருந்தன்மையுடன் மறந்துவிட்டோம். பிறகு 93இல், விடுதலைப்புலிகளைக் கொண்டு தன்னை வைகோ கொல்லப் பார்கிறார் என்று தனது சுயலாபத்திற்காக விடுதலைப்புலிகளை இழிவுபடுத்தியதையும் நாம் மறந்துவிட்டோம். கடந்த வருடம்கூட, வைகோ தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளவர், தன்னைக் கொல்லத் திட்டமிடுகிறார் என்று தயாநிதிமாறன் ஜனாதிபதியிடம் பிராது கொடுத்ததும் நமக்கு நினைவில் இல்லை. (வைகோவிற்காக பரிந்து பேசவில்லை. அவர் புலியல்ல, மியாவ்)

தற்போது நடந்துவரும் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து, தமிழகமெங்கும் போர்நிறுத்தம் கோரி போராட்டங்கள் வெடித்தபோது, இந்தப் போராட்டத்தை திசைதிருப்ப கருணாநிதி நடத்திய நாடகம்தான், மக்களிடம் நிவாரணநிதி வசூல் செய்தது. எத்தனை கோடி ரூபாய்களை நாம் வசூல் செய்தாலும், அதைவிட பத்து மடங்கு அதிகமான பணத்தையும் பொருளையும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களால் அவர்களது உறவுகளுக்காக சேகரிக்கமுடியும் என்பது கருணாநிதி அறியாததல்ல. அவர்கள் நம்மிடம் பசியென்று பிச்சை கேட்கவில்லை, உயிரைக் காப்பாற்றுங்கள் என்று மன்றாடினார்கள்.

பிறகு ஒருபக்கம் மனிதச்சங்கலி, கண்ணீர்க் கடிதம் என்றும், மற்றொரு பக்கம் இனப்படுகொலையை மக்களிடம் கொண்டு செல்லும் இன உணர்வாளர்களை ஒடுக்குமுறை சட்டங்களில் கைது செய்து மக்களை பயமுறுத்தியதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

கருணாநிதிக்கு வயதாகிவிட்டது, வேட்டியை நனைத்துக்கொண்டார் என்று வக்கிரமாக ஞாநி எழுதியபோது, ஞாநியை பார்ப்பானென்று திட்டினோம். ஆனால் பிரபாகரனைப் பிடித்தால் கௌரவமாக நடத்தவேண்டுமென்று அதே வக்கிரத்தோடு கருணாநிதி சொன்னபோது எந்த சுவற்றில்போய் நாம் செய்தோம்?

எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழத்தமிழரைக் கொன்றொழிக்கும் இந்திய அரசு என்பது சோனியா காந்தியின் அரசு மட்டுமல்ல, அது கருணாநிதியின் அரசும்தான் என்பதை நாம் யாருக்காக இன்னும் மறைக்கிறோம்?

ஈழப்பிரச்சனையில் இந்தியாவின் தற்போதைய அணுகுமுறைக்கு பார்ப்பனிய அரசியல்தான் காரணமென்று சிறிதுகாலம் முன்புவரை நாம் திடமாக நம்பினோம். சோ, இந்து ராம், சு.சாமி, ஜெயலலிதா என்று பார்ப்பனர்களாய்ப் பார்த்து வசைபாடினோம். கருணாநிதி மட்டும் என்ன செஞ்சு கிழிச்சுட்டாரு என்று பார்ப்பன நண்பர்கள் கேட்டபொழுது, அவர் ஆட்சியில் இருப்பதால்தான் நாங்கள் இந்தளவாவது பேசமுடிகிறது என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டோம். இன்றும் பார்ப்பனர்கள் நமக்கு எதிராய்த்தான் இருக்கிறார்கள். தமிழின விரோத கருத்துகளை/செய்திகளை ஊடகங்களில் நமக்கெதிராய் பரப்பிவருகிறார்கள். ஆனால் அவர்களையும்மீறி நம் தரப்பு நியாயங்களை கொஞ்சம் கொஞ்சமாக முன்னே கொண்டுசெல்ல முடிகிறது. இளைஞர்களில், ஒரு சில பார்ப்பனர்கள்கூட நம் பக்கம் வந்து நிற்கிறார்கள்.

ஆனால் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, கபட நாடகமாடி, மக்களை வஞ்சிக்கும் கருணாநிதியின் துரோகத்தை நாம் மிகத் தாமதமாகவே புரிந்துகொண்டோம். இராஜாஜியைப் பற்றி கருணாநிதி முன்பொருமுறை சொன்னாராம், இராஜாஜிக்கு உடம்பெல்லாம் மூளை, அந்த மூளையெல்லாம் வஞ்சகம் என்று. இராஜாஜி செத்துவிட்டார், அந்த இடத்தில் இப்போது கருணாநிதி. கருணாநிதிக்கு உடம்பெல்லாம் மூளை, அந்த மூளையெல்லாம் வஞ்சகம், துரோகம், வக்கிரம், சுயநலம்.

ஜெயலலிதா கொடுமைக்காரி. இந்துத்துவ அடிப்படைவாத கருத்துடையவர். அவருடைய ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. இதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இன்றுபோல் அவர் நாளையும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவார்/செயல்படுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் ஒரு நப்பாசை உண்டு. ஜெயலலிதா ஒரு பிடிவாதக்காரி. அந்த பிடிவாதத்திற்காகவாவது, இன்னும் கொஞ்சநாளைக்கு ஈழம்தான் தீர்வு என்று பேசமாட்டாரா என்றொரு நப்பாசை.

கூடவே இன்னும் கொஞ்சம் சின்ன சின்ன ஆசைகளும் உண்டு. நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும், விரைவில் சட்டமன்றத் தேர்தல் வருமென்று பலரும் ஆருடம் சொல்கிறார்கள். மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வரவேண்டும். நள்ளிரவில் கருணாநிதியை அவருடைய சின்ன வீட்டிலிருந்து கைது செய்யவேண்டும். “அய்யய்யோ கொல்றாங்கப்பா” என்ற கருணாநிதியின் அலறல் நாடகத்தைப் பார்க்கவேண்டும். மானங்கெட்ட வீரமணி ஜெயலலிதா காலில் போய் மீண்டும் மண்டியிடுவதைப் பார்க்கவேண்டும். ஜெயலலிதாவிற்கு பழைய கோபம் பாக்கியிருந்தால், இருள்நீக்கி சுப்பிரமணியின் மீதான கொலை வழக்கை ஒழுங்காக நடத்தவேண்டும்.

ஈழத்தில் மக்கள் படும் இன்னல்கள் பற்றிய செய்திகள் இன்னும் நம்மக்களுக்கு பெரிதாகப் போய் சேர்ந்ததாகத் தெரியவில்லை. கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சிகள் தொடர்ந்து இந்த செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன. இந்த நிலையில் கிராமங்களுக்கும் ஈழத்துச் செய்திகளை கொண்டு செல்லும் மிகப்பெரும் வலிமை ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு உண்டு. இந்த தேர்தலில், கருணாநிதி+காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அரசியல் செய்வதற்கு ஜெயலலிதாவிற்கு எத்தனையோ விசயங்கள் இருக்கிறது. முக்கியமாக, வரலாறு காணாத விலைவாசி உயர்வு, தொடர் மின்வெட்டு மற்றும் குடும்ப அரசியல். இவைகளைவிட ஈழத்தமிழர் பிரச்சனையை அவர் முன்னெடுத்திருப்பது நமக்கு சாதகமான விசயம். இந்த தேர்தல், தமிழ் ஈழ ஆதரவு X எதிர்ப்பு என்ற நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. தமிழக மக்கள் யார் பக்கம் என்று பார்ப்போம்.

எந்த காலத்திலும் இரட்டை இலைக்கு வாக்களிப்பேன் என்று நான் நினைத்ததில்லை. தலைவிதியின் மீது நம்பிக்கையில்லை. ஆனால் இப்போது விதி என்று சொல்வதைத் தவிர வேறு பதிலில்லை. உங்கள் ஓட்டு எதிரிக்கா? துரோகிக்கா? என்றொரு நிலையில், எதிரியை மன்னிப்பதைத் தவிர எனக்கு வேறு வழிதெரியவில்லை. முதலில் துரோகியை ஒழித்துவிட்டு, பிறகு எதிரியை கவனிக்கலாம். ஆகவே, போடுங்கம்மா ஓட்டு! இரட்டை இலையைப் பார்த்து!!!


(2009 மே மாதம் இந்திய நாடாளுமன்றத்துக்கு நடந்த பொதுத்தேர்தலின் போது எழுதியது. சிங்கள இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது, தினந்தோறும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் செத்துக்கொண்டிருந்தபோது, சோனியா-கருணாநிதியின் கொலைகார கூட்டணி தோற்றுப்போகாதா என்ற ஆதங்கத்தில் எழுதியது. கீற்று இணையதளத்தில் வெளிவந்தது. இப்போது தேர்தல் முடிந்துவிட்டது. போரும் முடிவடைந்துவிட்டது. எல்லாமும் முடிவடைந்துவிட்டது.சும்மா ஒரு தொகுப்பிற்காக என் வலைப்பூவில் பதிவிடுகிறேன்.)

Labels: , ,

Sunday, April 26, 2009

தோழர் கொளத்தூர் மணி கைது ஏன்?



"இந்திய ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும்" குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டி கைது செய்துவிட்டு, இப்போது "பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு" குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றத்தையே மாற்றியிருக்கிறது அரசு ...தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு காரணத்தை தேடியிருக்கிறார்கள் ...

மேலும் ... கீழுள்ள சுட்டியில் படியுங்கள் பெரியார் முழக்கம்

http://www.periyardk.org/images/pdf/23.04.09.pdf

http://www.periyardk.org/mulakkam.php

Labels: , , , ,

Sunday, January 25, 2009

யாதும் ஊரே, யாவரும் கேளிர்

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"

- புறநானூறு, கி.மு.200

அகதியாய் அலைவோம் என்று

அன்றே தெரிந்திருக்கிறது.

----------------------------------------------------

படம் : புலிகளை அழிக்கிறோம், கிழிநொச்சியைப் பிடிக்கிறோம் என்ற பெயரில், சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்திவரும் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து தப்பிக்க தொடர்ந்து இடம்பெயர்ந்துக்கொண்டே இருக்கிறார்கள் லட்சக்கணக்கான மக்கள். ஜனவரி- 2009

Saturday, January 24, 2009

பத்திரிகை தர்மத்துக்கான விருதுகள்



பத்திரிகை தர்மத்துக்கான
விருதுகள்.

ஹிந்து என்.ராம்'க்கு "சிங்கள ரத்னா"!
லசிந்தாவுக்கு "மரணம்" !

------------------------------------------------------------
படிக்க :
"லசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம்" - சுந்தரராஜன் http://www.keetru.com/literature/essays/sundhararajan_3.php
"ஆரிய உதடுகள் உன்னது" - பாமரன் http://www.keetru.com/literature/essays/pamaran_5.php


Saturday, January 17, 2009

காதலில் விழுந்தேன்

காதலில் விழுந்தேன் ..
பலத்த அடி !!!

Friday, April 04, 2008

என் காதலி

நீ
கண்டிப்பாக காதலிக்கவேண்டும்
என்னையென்றில்லை
யாரையேனும்

அத்தனை காதலுக்குரியவள்
நீ

நம் காதல் குழந்தை

நீ - அம்மா
நான் - அப்பா
காதல் - குழந்தை

இன்று
உன் குழந்தைக்கு நான் அங்கிளாகவும்
என் குழந்தைக்கு நீ ஆன்டியாகவும்
மாறிப்போனோம்.

நம் குழந்தை
அனாதையாக
எங்கோ திரிய.

Sunday, July 08, 2007

நில். கவனி.. புறப்படு...

உருக்குலைந்த அங்கங்கள்
வயிறொட்டியப் பிள்ளைகள்
நிலைதடுமாறிய மனிதர்கள்
ஆதரவற்ற முதியோர்கள்

கொடுக்கலாமா? கூடாதா?
மனதுக்குள்
தர்க்கித்துக் கிடக்கும்போதே
கியர் மாற்றவும்
சிக்னல் மாறவும்
சரியாய் இருக்கிறது
ஒவ்வொரு முறையும்.